Advertisement

Responsive Advertisement

தாராண்மை வாதம் (Liberalism)


தாராண்மைவாதக் கருத்தியலானது, 'அரசு என்பது மக்களினுடைய நலன்களை பேணுவதற்காக மக்களால் உருவாக்கப்பட்ட உயர் சமூக நிறுவனம் என்றும் மனிதனின் முன்னேற்றப்பாதையில் அரசு ஒரு வழிகாட்டி' என்றும் குறிப்பிடுகிறது. இந்தவகையில், இக்கருத்தியலில் மக்களின் நலன்களைப் பேணுத, மக்களினால் உருவாக்கப்படுதல் எனும் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.


தாராண்மைவாத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லானLiberalism என்பது "Liber" என்ற இலத்தீன் சொல்லிருந்து தோன்றியதாகும். இதன் கருத்து 'சுதந்திரம்' என்பதாகும். இந்தவகையில் அரசின் அல்லது அரசாங்கத்தின் தேவையற்ற தலையீட்டிலிருந்து சுதந்திரமடைதலே தாராண்மைவாத அரசியல் மற்றும் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படை அம்சமாக கருதப்படுகின்றது.

தாராண்மைவாதமானது பல்வேறு காலப்பகுதியில் வாழ்ந்த பல நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களின் பங்களிப்புடன் வளர்ச்சியுற்ற ஒரு கருத்தியலாகும். இக்கருத்தியலுக்கு கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டில் மற்றும் ரோமானிய அறிஞரான அக்கியூனஸ்சின் கருத்துக்கள் அடிப்படையாக அமைந்தன.

இக்கருத்தியலை முன்வைத்து பிரபல்யப்படுத்தியவர்களில் ஜோன் லொக், அடம் ஸ்மித், டேவிட் ரிகாடோ, ஜே.எஸ் மில், ஜெரமி பென்தம், ஜோன் மார்சல் ஆகியோர் மிக முக்கியமானவர்களாக காணப்படுகின்றனர். இங்கு அரசின் பணியானது, சமுதாயத்தின் தேவைக்காகவும், நன்மைக்காகவும் காணப்படுவதால் காலத்திற்கு காலம் அது மாறுபட்டு செல்லும் போக்கினை கொண்டதாக காணப்படுகின்றது.


தலையிடா அரசு

17ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய நிலமானிய சமூக, பொருளாதார, அரசியல் முறைமை மற்றும் சர்வதிகார அரசாட்சி முறையின் பின்னணியில், ஆட்சியாளர்களின் தான்தோன்றித்தனமான ஆட்சி முறைமைக்கெதிராக புதிய சமூகப் பிரிவொன்று எழுச்சியடையத் தொடங்கியது. முதலாளித்துவத்தின் ஆரம்ப கட்டமான இக்காலத்தில் உருவான புதிய வர்த்தக மற்றும் மத்தியதர வகுப்பினர், அரசின் தான்தோன்றித்தனமான ஆட்சி முறையினையும், தான்தோன்றித்தனமான வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் வரி சேகரிப்பு முறையினையும் கொண்ட பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கவும், ஆதரிக்கவும் தொடங்கினர்.

பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீடுகளோ, கட்டுப்பாடுகளோ இன்றி எவ்வளவு செல்வத்தையும் உக்கைகும், அனுபவிக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் எனும் வகையில் இக்கொள்கையானது ஆரம்பத்தில் பொருளியலிலேயே தோற்றம் பெற்றது. இந்தவகையில், அரசானது பொருளாதார நடவடிக்கையிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் 'தலையிடாக் கொள்கை' வழியுறுத்தப்பட்டது. காலப்போக்கில், பொருளியலில் முன்வைக்கப்பட்ட தாராண்மைக் கொள்கை அரசியலிலும் பரவி அரசின் தலையிடாக் கொள்கை வழியுறுத்தப்பட்டது. இதன் மூலம் அரசானது, சட்டத்தையும் ஒழுங்கையும் பேனும் கருமத்தோடு மட்டும் தனது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டது.

இங்கிலாந்து அறிஞரான ஜோன் லொக் 1690ம் ஆண்டு எழுதிய 'சிவில் அரசாங்கத்தின் இரண்டு ஒப்பந்தங்கள்'இ பிரன்சிய அறிஞரான ரூஸோ 1762ம் ஆண்டு எழுதிய 'சமூக ஒப்பந்தம்'இ அடம் ஸ்மித் 1776ம் ஆண்டு வெளியிட்ட 'தேசங்களின் செல்வம்' மற்றும் தோமஸ் மல்தஸ் 1798ம் ஆண்டு எழுதிய 'சனத்தொகை' ஆகிய நூல்களின் மூலம் தாராண்மைவாதம் பற்றிய தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதில் தனியாள் வாதம், இயற்கை உரிமைகள், பொது விருப்பு மற்றும் பொது மக்கள் இறைமை என்பவற்றின் அடிப்படையிலான மக்களாட்சி, தலையிடா வர்த்தகம், சுதந்திரச் சந்தைகள் போன்ற பல விடயங்கள் பற்றி விளக்கப்பட்டன.

இதேவேளை, கைத்தொழில் புரட்சிக்காலத்தில் ஜே.எஸ் மில், ஜெரமி பென்தம் போன்றோர் அரசின் தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக பொருளாதார விருத்தியிலும் பொருளாதார விருத்தியின் பயன்களை சமூகத்தில் மீளப்பகிர்ந்தளிப்பதலும் அரசு நேரடியாக தலையிட வேண்டுமென வாதிட்டு வந்தனர்.


நலன்புரி அரசு / பொதுநல அரசு

தாராண்மைவாதமானது தலையிடாக் கொள்கை மூலம் சமூகத்தில் சிறு பான்மையினரான முதலாளித்துவ வர்க்கம் ஒன்றினைத் தோற்றுவித்தது. இவ்வர்க்கம் பெரும்பான்மையான தொழிலாளர் வர்க்கத்தினை சமூக அநீதிக்குட்படுத்தி சுரண்டத் தொடங்கியது. இத்தொழிலாளர் வர்க்கம் சமூக, பொருளாதார, சுகாதார, வதிவிட, கல்வி ரீதியான வசதிகளின்றி அடிமைகளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இத்தொழிலாளர் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகத் தம்மை ஒழுங்குபடுத்தியதுடன், கம்யூனிச சித்தாந்தத்தினை நோக்கி ஈர்க்கப்பட்டு வந்தனர். இதன் விளைவாக 1917 ஆம் ஆண்டு ரஸ்யாவில் 'ஒக்டோபர் புரட்சி' புரட்சி மூலம் 'சோசலிச அரசு' உருவாக்கப்பட்டது.

இது எதிர்காலத்தில் உலகம் பூராகவும் கம்யூனிசம் பரவுவதற்கு ஏற்ற தளமாக பயன்படத் தொடங்கியது. இந்நிலையில் சோசலிச பொருளாதாரச் சிந்தனையிலிருந்து தாராண்மைவாதத்தினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது என உணரப்பட்டது. மறுபக்கத்தில் நடந்து முடிந்த இரண்டு உலக யுத்தங்களினால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் அழிவுகளிலிருந்து உலக நாடுகளை மீண்டும் புனரமைக்க வேண்டிய பொறுப்பும் உணரப்பட்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பேணுதல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், மக்கள் சமத்துவத்துடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்ற கருத்துக்கள் வலுப்பெற்றன.

இப்பின்னணியிலேயே 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சமூகப், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தாராண்மைவாதம் செல்வாக்கு இழந்து சென்ற போது அதனை தடுத்து நிறுத்தும் வகையிலும் காலத்தின் தேவைக்கு பொருந்தும் வகையிலும் அரசானது சமூகத்தின் சகல துறைகளிலும் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் தலையிட வேண்டுமென அரசு பற்றிய 'பொதுநலக் கொள்கை' வழியுறுத்தப்பட்டது.

இதில் சமூகத்திலுள்ள சிறுவர்கள், முதியோர்கள், நோயாளிகள், பெண்கள், தொழிலற்றோர், வறியவர்கள் போன்றவர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில் அரசின் கடமையும், பொறுப்புமாகும். பொளாதாரத்தை முகாமைப்படுத்தி அபிவிருத்தியினால் கிடைக்கும் நன்மைகளை சமூகத்திற்கு பகிர்ந்தளித்தல் நலன்புரி அரசின் கடமையாகும். மேலும் தனியார்கள் கவனம் செலுத்தாது விடும் துறைகளை அரசு பொறுப்பெடுத்து வளர்ப்பதோடு ஏனைய நலன்புரி காப்புறுதி பணிகளை நலன்புரி அரசு நடைமுறைப்படுத்தி, அரசியல், பொருளாதார, சமூகப் பணிகளை மேற்கொள்ளுதல் வேண்டும் பொன்ற கருத்ததுக்கள் வழியுருதத்ப்பட்டன.


குறைந்தபட்ச அரசு

தற்போதைய 21ம் நூற்றாண்டில் 'குறைந்தபட்ச அரசு' என்ற நவ தாராண்மைவாதக் கருத்தியலே காணப்படுகிறது. 1990 களில் சோவியத் யூனியனின் சோசலிச முறைமையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், பூகோளமயவாக்கமும் தாராண்மை வாதத்தில் 'குறைந்தபட்ச அரசு' பற்றிய புதிய சிந்தனையினை உருவாக்கியது. குறைந்தபட்ச அரசு என்பது நலன்புரி அரசிற்கும், தலையிடா அரசிற்கும் இடைப்பட்ட அரசாகும். இக்கொள்கை முதலில் இங்கிலாந்தில் மார்க்ரெட் தட்சர் காலத்திலும்(1979-1990)) ஐக்கிய அமெரிக்காவில் ரொனால்ட் றீகன்(1981-1989) ஆட்சிக் காலத்திலும் நடைமுறைக்கு வந்திருந்தது. பின்னர் பல நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நலன்புரி அரசின் பொருளாதார முகாமைத்துவத்தில் அரசிற்கு ஏற்பட்ட தோல்வியே குறைந்தபட்ச அரசு தோன்றுவதற்குக் காரணமாகும். நலன்புரி அரசில் அரசானது உற்பத்தி, பங்கீடு, சமூக நலன்புரி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியிருந்தது. குறிப்பாக பொருளாதாரச் செயற்பாடுகளில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டியேற்பட்டது. இதற்காக திணைக்கள முறையிலான நிர்வாகத்தினை பலப்படுத்தியதுடன், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் போன்றவற்றை உருவாக்கிச் செயற்படுத்த வேண்டியுமிருந்தது. இந்நிறுவனங்களில் ஊழல், மோசடி, வீண்விரயம், செயற்திறனின்மை போன்ற குறைபாடுகள் ஏற்பட்டன. பெருமளவிலான நிறுவனங்கள் நஸ்டத்தில் இயங்கியதுடன், அவற்றை இயக்குவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டியேற்பட்டது.

இதனால் அரசு மேற்கொண்டு வரும் சமூக நலன்புரித் தேவைகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக வருடத்தில் பல தடவைகள் அரசு குறைநிலை வரவு, செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்க வேண்டியேற்பட்டது. இது பணவீக்கத்தினை அதிகரிக்கச் செய்ததுடன், மக்கள் மீது அதிகரித்த வரிச் சுமைகளையும் விதித்தது. இவையனைத்தும் ஒன்று சேர்ந்து பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கி, அரசியல் நெருக்கடிகள் உருவாகியது. இப்பின்னனியிலேயே அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு தாராண்மைவாதத்தில் 'குறைந்தபட்ச அரசு' எனும் கொள்கை உருவாக்கப்பட்டது.

சமூக விவகாரங்களில் குறைந்த முகாமைப்படுத்தலை அரசும், பொருளாதார விடயங்களை முகாமைப்படுத்தலை தனியார் துறையும் மேற்கொள்ளும் அடிப்படையில் அரசு தன்னைச் சுருக்கிக் கொள்வதவே இதன் பிரதான இயல்பாகும். இதன் மூலம் அரசிடமிருந்த சில உற்பத்தி, பங்கீடுத் தொழில்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அரசின் கீழ் உள்ள தொழில்கள் புதிய அரச முகாமைத்துவ கொள்கையின் கீழ் மீள் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டன. அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும் அதிக வகிபாகத்தினை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டதுடன் மக்களை அரசில் தங்கியிருப்போராக மாற்றும் சில நலன்புரிச் சேவைகளும் கைவிடப்பட்டன.


தாராண்மைவாத கருத்தியலுக்கு முக்கி பங்களிப்புச் செய்த சிந்தனையாளர்கள்

தோமஸ் ஹொப்ஸ் (1586 - 1679)

உண்மையில் இவர் ஒரு தாராண்மைவாத சிந்தனையாளர் அல்ல. எனினும் தாராண்மை அரசியல் தத்துவத்தின் அடிப்படை விடயங்களான அரசின் அடிப்படை தனிமனிதனாவான், தனிநபர் தர்க்கரீதியிலான சிந்தனையுள்ள சுயாதீன மனிதனாவான், அரசு என்பது மனிதர்களின் சமூகரீதியான படைப்பாகும் என்ற கருத்துக்களின் முன்னோடியாவார்.

ஹொப்ஸ் எதேச்சதிகார அரசாங்கத்தை சட்ட முறையான அரசாங்கமாக மாற்றுவதற்கு 1652 இல் லெவியாதன் (டுநஎயைவாயn) என்ற நூலினை வெளியிட்டார். அரசின் தோற்றம் தொடர்பாக அவர் கட்டியெழுப்பிய சமூக ஒப்பந்த கோட்பாட்டினுள், பின்னைய காலத்தின் லிபரல்வாதம் தொடர்பிலான சிந்தனைளர்களின் கருத்துக்களில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் மூன்றும் ஆழமாய் காணப்பட்டன.

ஜோன் லொக் (1632 - 1704)

ஹொப்சுக்குப் பின்னர் இங்கிலாந்தில் தோன்றிய பிரதான அரசியல் சிந்தனையாளரான இவர் தாராண்மைவாத அரசியல் சிந்தனையின் உண்மையான ஆரம்ப கருத்தாவாவார். அரசாட்சிக்கு எதிரானவரான லொக் இங்கிலாந்தின் மன்னர் ஆட்சி மற்றும் பாராளுமன்ற ஆட்சி ஆகியற்றுக்கு இடையில் நடைபெற்ற அதிகார போராட்டத்தில் பாராளுமன்ற வாதிகளை பிரதிநிதித்துவம் செய்தார்.

லொக் 1690 களில் 'அரசாங்கம் தொடர்பான இரு கட்டுரைகள் ' என்ற நூலை வெளியிட்டு பழைமை தாராண்மைவாதத்தின் அரசியல் அடிப்படையினை கட்டியெழுப்பினார். தாராண்மைவாத அரசியல் கருத்தியலுக்கு லொக் ,ணைத்த பிரதான கருத்துக்களை பின்வருமாறு காட்ட முடியும்.

அரச அதிகாரத்தின் மூலதாரம் மக்களாவர். மக்களால் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ள பொறுப்புடன் (வுசரளவநநளாip) கூடிய அதிகாரத்தினாலேயே அரசாட்சி செய்யும் அதிகாரம் ஆட்சியாளருக்கு கிடைத்திருக்கின்றது. பொதுமக்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்புடன் கூடிய அதிகாரத்தை நிபந்தனைகளை மீறாத வகையில் செயற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் கடமைப்பட்டிருந்தனர். பொது மக்களின் சுதந்திரம், வாழ்க்கை, மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் அந்நிபந்தனைகளின் நோக்கமாகும்.

தங்களுடன் உடன்பட்டுள்ள ஆட்சியாளர்கள் இந்த நிபந்தனைகளை மீறுவார்களாயின் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அரசாங்கத்திற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரமே காணப்படுகின்றது. இந்த அதிகாரம்
இருவழிகளில் கட்டுப்படுத்தப்பட்டது. ஒன்று அரசாங்கத்தின் அதிகாரம், மக்களால் ஆட்சியாளருக்கு வழங்கியுள்ள பொறுப்புசார் உடன்படிக்கையின் நிபந்தனைகள் மூலம் கட்டுப்படுத்தப்படல். இரண்டாவது பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கே வழங்கி இருந்தமை.

மொண்டஸ்கியூ (1689 - 1755)

பிரான்சிய அரசியல் சிந்தனையாளரான இவரின், 'அதிகார வேறாக்கம்' தொடர்பான கோட்பாடு தாராண்மைவாத சிந்தனைக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்பாகும். கி.பி. 1748 இல் பிரான்ஸிய மொழியில் வெளியிட்ட 'சட்டத்தின் உயிர்' என்ற கட்டுரையில் இது தொடர்பான சிந்தனையை அபிவிருத்தி செய்துள்ளார். இதன் பிரதான மூலக்கொள்கையாவது, அரசாங்கத்தின் அதிகாரமானது சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகிய பிரதான துறைகளுக்கடையே பிரித்து வைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அவ்வாறு இல்லாமல் இவ்வதிகாரமானது ஒரு நிறுவனத்திடம் அல்லது ஒரு நபரிடம் ஒன்று குவிக்கப்படும்போது தனியாள் சுதந்திரத்தை மீறும் ஆட்சி முறையொன்று உருவாகுவது அதன் பெறுபேறாகும். இதனை மொன்டஸ்கியூ 'கொடுங்கோல் ஆட்சி' (வுலசயnலெ) என குறிப்பிடுகின்றார். அரசாங்கத்தின் இவ்வதிகாரங்களை பிரதான மூன்று துறைகளுக்கிடையே தெளிவாக வேறாக்கல் மற்றும் இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றையும் சுயாதீனமாக இயங்கச் செய்வதன் மூலமே இதனை தடுக்க முடியும்.

அரசியல் அதிகாரம் ஆட்சியாளர்களால் கொடுங்கோண்மையான வகையில் பயன்படுத்தும் அபாயம் தொடர்ந்திருப்பதால் பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இந்த அதிகாரங்களுக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையின் விளைவாக இந்த எண்ணக்கரு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனவேதான் மொண்டஸ்கியூ அரசாங்க அதிகாரத்தை ஒரு நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒன்று குவிக்கக்கூடாது என குறிப்பிட்டார்.

ஜீன் ஜெக் ரூசோ (1712 - 1778)

பிரான்சியரான ரூசோ சமூக ஒப்பந்த கோட்பாட்டினை முன்னெடுத்து சென்றவர்களில் ஒருவராவார். 1762 இல் வெளியான 'சமூக ஒப்பந்தம்' எனும் நூல் அவரின் பிரதான அரசியல் நூலாகும். ரூசோவும் லொக், மொண்டஸ்கியூ போன்றே அரசினால் மனித சுதந்திரம் மீறப்படுகின்றமையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார். மக்களால் தமது சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்ட அரசினாலேயே அவர்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த புதிருக்கு ரூசோ கொடுத்த தீர்வு அரச அதிகாரமானது அரசினுள் ஒழுங்கமைந்துள்ள அனைவரினதும் நலனைக் கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும் என்பதாகும்.

ரூசோ இரண்டு எண்ணக்கருக்களை மையப்படுத்தி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஒன்று 'பொது விருப்பம்' அதாவது, அரசு பிரதிநிதித்துவப்படுத்துவது ஆட்சியாளர் எனும் சிலரின் விருப்பினையோ நல்வாழ்வினையோ அல்லாமல் அரசில் உறுப்பினராக உள்ள அனைவரினதும் ஒட்டு மொத்த விருப்பத்தினை பிரதிபலிக்கின்றது என்பதே இதன் அர்த்தமாகும். இரண்டாவது 'மக்கள் இறைமை' ஆகும். அதாவது மக்கள் இறைமையின் சொந்தக்கார் அரசோ அல்லது ஆட்சியாளர்களோவன்றி பொது மக்களே ஆவர் என்பதும் பொது மக்களிடம் உள்ள இறைமையை கையகப்படுத்தவோ பிரிக்கவோ முடியாது இதன் கருத்தாகும்.


விமர்சனம்

தாராண்மை வாதக் கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தும் வகையில் பல சாதகமான பண்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அந்தவகையில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுகளாக உள்ளமையினால் மக்களின் நலன்களை பேனும் கட்டாயம் அரசுக்கு காணப்படுகின்றமை. மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகின்றமை. சுதந்திரமான முயற்சிகள் மூலம் தனி நபர்கள் சுதந்திரமான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடிகின்றமை. ஊடகங்களுக்கு சுதந்திரங்கள் வழங்கப்படுவதன் மூலம் விழிப்புணர்வுமிக்க ஊடகத்துறையை உருவாக்க வழி செய்கின்றமை. அரசியல் கட்சிகளிடையேயான போட்டித்தன்மை காரணமாக ஒழுங்கமைக்கப்பட் கட்சிகளும், தரம் வாய்ந்த அவற்றின் செயற்பாடுகளும் உருவாக வாய்ப்புக்கள் ஏற்படுகின்றமை. போன்றவை அவற்றில் முக்கியமானவைகளாகும்.

எனினும் இக்கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்தாத பல அம்சங்களையும் கொண்டிருப்பதைக் காணலாம். அவற்றையும் இங்கு நோக்குவோம். தாராண்மை கோட்பாட்டின்படி எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மையோரின் முடிவுகளே தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில், பல இனங்கள் வாழ்கின்ற நாட்டில் இது சிறுபான்மையினருக்கு எதிரானதாக காணப்படுகின்றது. தற்காலத்தில் பெரும்பாலான அரசுகள் பல்லின சமூக அமைப்பைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. எனவே அவ்வாறான அரசுகளில் வாழும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளையும் அதைக் கண்டு கொள்ளாத அரசையும் எடுத்துக்காட்டலாம்.

இக்கருத்தியலானது குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடைவை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றது. அந்தவகையில், தேர்தலின் மூலம் அரசாங்கம் மாற்றமடையும்போது முன்னைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நீண்ட கால திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அரசின் அபிவிருத்தியும் தடைப்படுகின்றது.

இங்கு அரசியல் அதிகாரமானது, தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களின் கைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புக்களே அதிகமாகவுள்ளது. நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்கள் தேர்தலில் போட்டியிட்டு பிரசாரம் செய்வதற்கான பொருளாதார பலம் அற்றவர்களாகக் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். தற்காலத்தில் அநேக நாடுகளில் நடுத்தர மற்றும் கீழ்த்தர மக்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இது, தாராண்மை பொருளாதாரக் கோட்பாட்டுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. தாராண்மை பொருளாதார கோட்பாடு தனியார் துறை பொருளாதாரத்தை ஆதரிக்கின்ற ஒன்றாகும். இப்பொருளாதார முறையானது, சாதாரண மக்களின் நலன்களைக் கவனிப்பது குறைவு. ஆகையால், தாராண்மைவாதக் கோட்பாட்டினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு தாராண்மைக் கருத்தியலானது தற்கால தேசிய மற்றும் சர்வதேச அரசியலுக்கு பொருந்துகின்ற மற்றும் பொருத்தப் பாடற்ற சிந்தனைகளையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.


By : M.S.M. Naseem 
         MA in (P. Sci), BA (Hons), PGDE (R)


Post a Comment

2 Comments